அட போங்கப்பா! பெங்களூரில் மோசமான சாலைகளால் விரக்தி; வெளியேறப்போவதாக முன்னணி நிறுவனம் அறிவிப்பு
பெங்களூரு: மோசமான சாலைகளால் விரக்தி அடைந்துள்ள 'பிளாக்பக்' என்ற முன்னணி நிறுவனம், பெங்களூரை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து ஏராளமான தொழிலதிபர்களும் மோசமான சாலைகள் விஷயத்தில், காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் தலைநகராக உள்ள பெங்களூருக்கு, சர்வதேச கவன ஈர்ப்பு உள்ளது. இங்கிருக்கும் சீதோஷ்ண நிலையால் முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் இங்கே தொழில் தொடங்கின. இதனால் 'சிலிகான் சிட்டி' என்ற பெருமை கிடைத்தது. தவிர பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக பெங்களூரு விளங்குகிறது. பொருளாதார சக்தி மாநிலத்தின் 2024 - 25 நிதியாண்டிற்கான ஜி.டி.பி., எனும் மாநில உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 28.84 லட்சம் கோடி ரூபாய். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 12.8 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது. நடப்பு நிதி ஆண்டில் மாநிலத்தின் ஜி.டி.பி., 30.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் சாதகமான சூழ்நிலை மற்றும் தொழிலதிபர்களின் கருத்துக்களால் 2021 முதல் 2024 வரை 12 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளை கர்நாடகா ஈர்த்துள்ளதாக, சிறு, குறு தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் சமீபத்தில் கூறியது. இதை வைத்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மார்தட்டிக் கொண்டது. ஆனால் இதற்கெல்லாம் 'வேட்டு' வைக்கும் விதமாக நேற்று முன்தினம் 'பிளாக்பக்' என்ற முன்னணி நிறுவனத்தின் சி.இ.ஓ., ராஜேஷ் யபாஷி, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'கடந்த ஒன்பது ஆண்டுகளாக பெல்லந்துார் பகுதியில் எங்கள் அலுவலகம், வீடு இருக்கிறது. ஆனால் தற்போது இங்கே தொடர்வது மிகவும் கடினம். நாங்கள் இங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம்.' 'இதற்கு காரணம் எங்கள் அலுவலகம் முன் செல்லும், வெளிவட்ட சாலையின் மோசமான நிலை. இந்த சாலை பள்ளங்கள், துாசிகளால் நிறைந்துள்ளது. சக ஊழியர்களின் சராசரி பயணம் ஒரு வழி பாதையில் தினமும் ஒன்றரை மணி நேரமாக அதிகரித்துள்ளது. சாலையை சரி செய்வர் என்ற நம்பிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் காணவில்லை' என, ராஜேஷ் பதிவிட்டுள்ளார். நிர்வாக தோல்வி இந்த பதிவு, வைரலான நிலையில், ராஜேஷ் யபாஷியின் கருத்துக்கு பல தொழிலதிபர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல முன்னணி ஐ.டி., நிறுவனங் களில் பணியாற்றியவரும், தொழில் அதிபருமான மோகன்தாஸ் பை அளித்த பேட்டி: சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பிரச்னைகளை சந்திக்கின்றனர். பிளாக்பக் நிறுவனம் பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது அரசின் நிர்வாக தோல்வியின் அறிகுறியாகும். அந்த நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். வெளிவட்ட சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் மட்டும் 8 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் தயவு செய்து, சாலை பிரச்னையை கவனிக்கவும். வெளிவட்ட சாலையில் இருந்து நிறுவனங்கள் வெளியேறுகின்றன. தயவு செய்து இந்த பிரச்னையில் தலையிடுங்கள். துணை முதல்வர் சிவகுமாரை ஒன்றரை மாதத்திற்கு முன்பு சந்தித்தேன். வெளிவட்ட சாலையில் சாலை பிரச்னைக்கு தீர்வு காண, சில யோசனைகள் கூறினேன். 'அனைத்தையும் செய்கிறேன்' என்றார். ஆனால் நடவடிக்கை எடுத்ததுபோல் தெரியவில்லை. சாலைப் பள்ளங்களை மூடுவது பெரிய விஷயமே இல்லை. இந்த விஷயத்தில் ஐ.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவும் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. சாலைப் பள்ளம் விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜ., அரசியல் செய்கின்றன. இருவரும் 'லுாட்டி' அடிப்பதில் ஆர்வமாக உள்ளனர். கிரேட்டர் பெங்களூரு ஆணைய கமிஷனர் மகேஸ்வர ராவ் திறமையான அதிகாரி. அவரை வேலை செய்யவிடாமல் சிலர் கையை கட்டி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அச்சம் தன் 'எக்ஸ்' பக்கத்தில் பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தார் ஷா வெளியிட்ட பதிவில், துணை முதல்வர் சிவகுமாரை தன் 'டேக்' செய்து, 'இது கடுமையான பிரச்னை. இதை தீர்க்க அவசர நடவடிக்கை தேவை' என, குறிப்பிட்டுள்ளார். சாலைப் பள்ளங்களால் ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருப்பது, சித்தராமையா அரசை பதற்றமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகரில் சாலைப் பள்ளங்களை சரி செய்யவும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் 1,100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிய சில நாட்களிலேயே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம், ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
உடல் வலியால் அவதி
கடந்த இரண்டரை ஆண்டுகளாக, பெங்களூரு நகரில் உள்ள சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக ஐ.டி., நிறுவனங்கள் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, ஹெப்பகோடி, பெல்லந்துார், மாரத்தஹள்ளி, கே.ஆர்.புரம் - ஹெப்பால் வெளிவட்ட சாலை இருசக்கர வாகனம், கார்கள் இயக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் வாகனங்களில் ஊழியர்களால், சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர முடியவில்லை. தாமதமாக அலுவலகத்திற்கு வருவதால், தாமதமாகவே வீட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதுடன், குண்டு, குழியுமான சாலையால் உடல் வலியாலும் அவர்கள் அவதிப்படுகின்றனர். இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், சாலைப் பள்ளங்களை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வரியை கொடுங்கள்!
பனத்துாரில் வசிக்கும் பெண் இன்ஜினியர் ஒருவர், சாலை பள்ளங்களை மூடாத அரசை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தினர். அவர் கையில் வைத்திருந்த பதாகையில், எங்கள் வரியை திரும்ப கொடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பெண் கூறுகையில், கர்நாடகாவுக்கு அதிக வரி வசூலித்து கொடுப்பது பெங்களூரு. பெங்களூருக்கு அதிக வரி கொடுப்பது மஹாதேவபுரா தொகுதி. இந்த தொகுதியில் உள்கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டால், எதற்காக நாங்கள் வரி செலுத்த வேண்டும் எங்கள் வரியை திரும்ப கொடுத்து விடுங்கள். நாங்களே பார்த்து கொள்கிறோம் என்றார்.
ஆந்திராவுக்கு வருக!
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அம்மாநில ஐ.டி., அமைச்சருமான நர லோகேஷ் 'எக்ஸ்' பதிவில், 'வணக்கம் ராஜேஷ், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் நிறுவனத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்றலாம். நாட்டின் துாய்மையான நகரங்களின் பட்டியலில் விசாகப்பட்டினம் 5வது இடத்தில் உள்ளது. தரமான உள்கட்டமைப்பு வசதி உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது. தயவு செய்து உங்கள் நிறுவனத்தை இங்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கவும்' என கூறியுள்ளார்.
காலக்கெடு
துணை முதல்வர் சிவகுமார் 'எக்ஸ்' பதிவில், 'பெங்களூரில் சாலையில் உள்ள பள்ளங்களின் பிரச்னையை தீர்க்க, நவம்பர் மாதத்திற்குள் பள்ளங்களை மூட ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம் விரைவில், பள்ளங்களை மூடும். சுத்தமான பெங்களூரு, சீரான போக்குவரத்து இது தான் எங்கள் இலக்கு' என கூறி உள்ளார்.
'மெட்ரோ'வே காரணம்
கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் கூறுகையில், '' ஐ.டி., நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பு, எங்களிடம் உள்ளது. சில சாலை வேலைகள் உடனடியாக முடிய கூடியது. சில வேலைகளுக்கு நீண்ட நாட்கள் ஆகிறது. எங்களால் முடிந்த வரை, பணிகளை செய்து வருகிறோம். பெங்களூரு மக்கள் உள்கட்டமைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதில் தவறு இல்லை. ' 'குப்பை, சாலை பிரச்னையை தீர்த்து வைப்போம். வெளிவட்ட சாலையில் உள்ள, ஐ.டி., நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். மெட்ரோ பணிகள் நடப்பதால், சில இடங்களில் சாலைப் பள்ளம் விழுகிறது. மழை பெய்த பின்னரும், சாலையில் பள்ளம் விழுகிறது. மழைக்காலம் முடிந்ததும் மீண்டும், சாலையை சீரமைக்கும் பணி செய்வோம்,'' என்றார்.