சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் நோயாளி மரணம்
துமகூரு: பாவகடாவில் சரியான நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால், ஒரு நோயாளி உயிரிழந்தார். துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவின் உள்ள ஒய்.என்.ஹொஸ்கோட் கிராமத்தில் வசித்தவர் சையத் அக்ரம் 42. கடந்த, 16ம் தேதியன்று, இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கிராமத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ரத்த அழுத்தம் குறைவாக உள்ளது. கூடுதல் சிகிச்சைக்கு தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினார். ஆனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும், நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. சமுதாய சுகாதார மையத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் ஓட்டுநர் இல்லை; ஆம்புலன்சும் பழுதடைந்துள்ளது. எனவே, தனியார் ஆம்புலன்சை வரவழைப்பதற்குள் சையத் அக்ரம் உயிரிழந்தார். ஒய்.என்.ஹொஸ்கோட் கிராமத்தில், சமுதாய சுகாதார பவன் கட்டுவதற்கு சையத் அக்ரமின் தந்தை சாதிக் சாப், 2010ல் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். அவரது மகனுக்கே சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார். சுகாதார மையத்தில் தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. இதை, கிராமத்தினர் கண்டித்துள்ளனர்.