உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பாதுகாப்பான பாதசாரிகளின் நடைபாதை ஜூலை 1 முதல் விழிப்புணர்வு பிரசாரம்

 பாதுகாப்பான பாதசாரிகளின் நடைபாதை ஜூலை 1 முதல் விழிப்புணர்வு பிரசாரம்

பெங்களூரு: ''பெங்களூரு நகரில் நடைபாதைகளை, பொது மக்கள் நடப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், ஜூலை 1 முதல், பாதுகாப்பான பாதசாரிகள் பாதை விழிப்புணர்வு இயக்க பிரசாரம் துவங்கும்,'' என, பெங்களூரு நகர்ப்புற துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார். பெங்களூரில் நேற்று நகரின் நடைபாதைகள் சீரமைப்பு, பழுது பார்ப்பது தொடர்பாக, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகாரிகளுடன், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: ஜி.பி.ஏ.,வின் கீழ், 2,000 கி.மீ., பிரதான சாலைகள், சர்வீஸ் சாலைகளில் பாதசாரிகள் நடப்பதற்கு இடையூறாக இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்றுவதற்காக, ஜூலை 1ம் தேதி முதல், பாதுகாப்பான பாதசாரிகள் பாதை விழிப்புணர்வு இயக்க பிரசாரம் துவங்குகிறது. அபராதம் நடைபாதைகளை ஆக்கிரமித்து, கடை பெயர் பலகைகள், பொருட்கள், இதர பொருட்களை வைத்திருந்தால், அவற்றை ஜூலை 1ம் தேதிக்குள் அகற்றிவிடுங்கள். இல்லையெனில், மாநகராட்சி அவற்றை அகற்றி, அபராதம் விதிக்கும். நகரில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1,000 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில், 30 சதவீதம் பேர் பாதசாரிகள் தான். பாதுகாப்பான நடைபாதைகள் அமைப்பதால், இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். அதுபோல, நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறும் வாகனங்கள், அகற்றப்படும். ஜூலை 1ம் தேதி முதல், முக்கிய சாலைகள், நடைபாதைகளில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. நகரின் சாலை ஓரங்களில் உரிமையாளர்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜூலை 1 முதல் அத்தகைய வாகனங்களில் அறிவிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். ஏழு நாட்களுக்கு பிறகும் அந்த வாகனங்கள் அகற்றப்படாவிட்டால், அவை அப்புறப்படுத்தப்பட்டு, ஜூலை 10ல் ஏலம் விடப்படும். ரூ.70 கோடி ஒதுக்கீடு நகரின் ஐந்து மாநகராட்சிகளில் உள்ள நடைபாதைகளை சீரமைக்க, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. சாலை பள்ளங்களை அறிவியல் பூர்வமாக மூடவும், முக்கிய சந்திப்புகள், சிக்னல்களுக்கு அருகில் அவசர சீரமைப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சிக்னல்களில் இருந்து 75 மீட்டர் தொலைவிற்குள் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கும்படி போக்குவரத்து போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை