கல்யாண் நகர்: ஸ்ரீசத்யசாய்பாபா 100வது பிறந்த நாளையொட்டி, உலக நன்மைக்காக நடந்த சஹஸ்ர சண்டி யாகம் நிறைவு பெற்றது. ஸ்ரீசத்யசாய்பாபா 100வது பிறந்த நாளையொட்டி, ஹிருதய ஸ்பந்தனா அமைப்பு சார்பில் உலக நன்மைக்காக சஹஸ்ர சண்டி யாகம், பெங்களூரு கல்யாண் நகரில் உள்ள ஸ்ரீ சுரபாரதி சமஸ்கிருதம், கலாசார பவுண்டேஷன் அரங்கில், இம்மாதம் 4ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடந்தது. இந்த யாகத்தில் கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் வேத குருக்கள் வந்திருந்தனர். தினமும் பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன. நிறைவு நாளான கடந்த 9ம் தேதி, 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வேத குருக்கள் அமர்ந்து, துர்க்கா சப்தசதி பாராயணத்துடன் சஹஸ்ர சண்டி ஹோமம் நடத்தினர். பின், தேர்வு செய்யப்பட்ட 55 பக்தர்களுக்கு பிரசாதங்களுடன், சாரதா மடம் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இந்த பிரசாதங்கள் பூர்ணாஹூதிக்காக, யாகம் செய்யும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து 108 கன்யா பூஜை, 108 சுஹாசினி பூஜை, கோ தானம், தச தானம் நடத்தப்பட்டன. யாகத்தின் நிறைவாக, பக்தர்கள் நலனுக்காக சண்டி கலச விசர்ஜனம், புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பின், 150க்கும் மேற்பட்ட வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆரத்தியுடன் சஹஸ்ர சண்டி யாகம் நிறைவு பெற்றது. ஸ்ரீசுரபாரதி நிறுவன தலைவர் சீனிவாசன் வழிகாட்டுதல் கீழ், ஸ்ரீபிரபாகர சர்மா தலைமையில் யாகம் நடந்தது. இலங்கை, மலேசியா, இத்தாலி, குரோஷியா, நார்வே உட்பட பிற நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஹிருதய ஸ்பந்தனா செயற்குழு உறுப்பினர்கள் சத்யசாய் பிரசாத், சாயிரா, நாகஸ்ரீ, இட்டா ரகுநந்தன், ஜெகதீஷ், சீனிவாஸ், வெங்கண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.