சிவகங்கை மலையில் மாயமான ஐ.டி., ஊழியரை தேடுவது நிறுத்தம்
பெங்களூரு: பெங்களூரின் காடுகோடியைச் சேர்ந்தவர் அத்வைத் உபாத்யா, 31. ஐ.டி., ஊழியர். கடந்த 7ம் தேதி, பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே சிவகங்கை மலைக்கு 'டிரெக்கிங்' சென்று மாயமானார். மலையில் உள்ள சாந்தலா நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், வனத்துறையினர் அத்வைத்தை தேடினர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த, மலையேற்ற சாதனையாளர் கோதி ராஜை, போலீசார் அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் 4,800 அடி பள்ளத்தில் இறங்கி அவர் தேடினார். நேற்று இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அத்வைத் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரை தேடும் பணியை போலீசார் நிறுத்தினர். இதுகுறித்து தாபஸ்பேட் போலீசார் காடுகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.