மைசூரு தசரா விளையாட்டு போட்டிகள் பங்கேற்கும் வீரர்களுக்கு சிறப்பு வசதிகள்
மைசூரு தசரா திருவிழாவில், விளையாட்டு போட்டிகள் நடத்த, கர்நாடக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை தயாராகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு, சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், மைசூரில் நடக்கும் தசரா திருவிழாவி ல், மாநில இளைஞர் நலம், விளையாட்டு துறை விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்வது வழக்கம். இதில் கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களின் விளையாட்டு வீரர்களும் பங்கேற்பர். இம்முறை செப்டம்பர் 22 முதல் 25 வரை, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. மல்யுத்தம், ஈட்டி எறிதல், கோகோ, கபடி, கால்பந்து என, பலவிதமான விளையாட்டுகள் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தே வையான, அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன . அதிநவீன வசதிகள் இது குறித்து, விளையாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: தசரா விளையாட்டு போட்டிகளில், இதுவரை இல்லாத வசதிகள் இம்முறை இருக்கும். புதிய பாக்சிங் ரிங், விளையாட்டு அறிவியல் மையம், கால்பந்து விளையாட்டு அரங்கம் என, அதிநவீன வசதிகள் செய்யப்படும். விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. செப்டம்பர் 22 முதல் 25 வரை, மாநில அளவிலான தசரா போட்டிகள் நடக்கும். எனவே, செப்டம்பர் 10ம் தேதிக்குள், தாலுகா, மாவட்ட அளவிலான தசரா விளையாட்டு போட்டிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கம் உட்பட 25 க்கும் மேற்பட்ட அரங்கங்களில், 27 விளையாட்டு போட்டிகள் நடக்கும். இதற்காக அரங்கம் தயாராக்கப்படுகிறது. மைசூரில் பாக்சிங் இல்லாமல் இருந்ததால், தசரா நேரத்தில் போட்டி நடத்த, வேறு இடத்தில் இருந்து பாக்சிங் ரிங் கொண்டு வரப்பட்டது. இம்முறை மை சூரின் சாமுண்டி விஹார் உள் விளையாட்டு அரங்கிலேயே கர்நாடக ஒலிம்பிக்ஸ் ஒருங்கிணைப்பில் 20 லட்சம் ரூபாய் செலவில், பாக்சிங் ரிங் பொருத்தப்பட்டுள்ளது. இங்கேயே தசரா பாக்சிங் விளையாட்டு போட்டி நடத்தப்படும். அறிவியல் மையம் சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கில், 3.5 கோடி ரூபாய் செலவில், விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது, தசரா நேரத்தில் விளையாட்டு அறிவியல் மையம் திறக்கப்படும். விளையாட்டு வீரர்கள் காயம் அடைந்தால் பிசியோதெரபி, ஆக்சிஜன் வசதி, உடற் பயிற்சி என, அனைத்து வசதிகளும் கிடைக்கும். இதனால், விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரிக்க முடியும். தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்த வசதியாக, மைசூரின் உள் விளையாட்டு அரங்கம் தயார் செய்யப்படுகிறது. சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கின் பக்கத்தில் உள்ள, சாய்பாபா கோவில் முன் உள்ள காலியிடம், கால்பந்து போட்டிக்கு பயன்படுத்தப்படும். இங்குள்ள சிறு, சிறு செடிகளை அகற்ற, வனத்துறையிடம் அனுமதி கோ ரியுள்ளோம். அனுமதி கிடைத்த பின், செடிகளை அகற்றி, கால்பந்துடன், கபடி, கோகோ, ஹேண்ட் பால் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும். சாமுண்டி விஹார் விளையாட்டு அரங்கம் வளாகத்தில், அதிநவீன உணவகம் கட்டப்பட்டுள்ளது; இதில் சமையல் அறையும் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -