டெலிமனஸ் உதவி எண்ணுக்கு வரவேற்பு தினமும் 3,500 தொலைபேசி அழைப்புகள் டெலிமனஸ் உதவி எண்ணுக்கு வரவேற்பு தினமும் 3,500 தொலைபேசி அழைப்புகள்
பெங்களூரு: மனநல பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும், 'டெலிமனஸ்' உதவி எண்ணில் அழைப்பு விடுப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தினமும் 3,500 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.இது குறித்து நிமான்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:மனநிலை பாதிப்பால் அவதிப்படுவோர், வீட்டில் இருந்தே ஆலோசனை பெற வசதியாக, 'டெலிமனஸ்' உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை நிமான்ஸ் மருத்துவமனை நிர்வகிக்கிறது. வெவ்வேறு விதமான மன நோய்களுக்கு, இலவசமாக ஆலோசனை கூறப்படுகிறது.கடந்த 2022 அக்டோபரில் துவக்கப்பட்ட உதவி எண்ணுக்கு, தேவையான உதவிகளை, சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செய்கிறது.உதவி எண்ணுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று ஆண்டு கடப்பதற்குள், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. தினமும் சராசரியாக 3,500 அழைப்புகள் வருகின்றன.வாரத்தின் ஏழு நாட்களும், உதவி எண் செயல்படுகிறது. 20 மொழிகளில் ஆலோசனை கூறப்படுகிறது.மனநிலை பாதிப்புள்ளவர்கள், குடும்ப பிரச்னை, பொருளாதார பிரச்னையால் அவதிப்படுவோர், கல்வி நெருக்கடிக்கு ஆளானோர், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்போர், நினைவாற்றல் குறைந்திருப்பது.தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் என, மனநல சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், உதவி எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுகின்றனர்.இதுவரை அழைப்பு விடுத்த அனைவரும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர். துாக்கமின்மை, தேர்வு நெருக்கடி பிரச்னைக்காகவும் எங்களை தொடர்பு கொள்கின்றனர். 'டெலிமனஸ்' உதவி எண்ணில் தொடர்பு கொண்டவர்களுக்கு, பிரச்னை தீவிரமாக இருந்தால் வீடியோ மூலமாக, ஆலோசனை கூறப்படுகிறது. இந்த சேவைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், நாடு முழுதும் விஸ்தரிக்க நிமான்ஸ் முடிவு செய்துள்ளது.தற்போதைக்கு கர்நாடகா, தமிழகம், ஜம்மு - காஷ்மீரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீப நாட்களாக மனநல ஆரோக்கியம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.எனவே உதவி எண்ணுக்கு வரும் அழைப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இங்கு ஆலோசனை பெற்று நோயாளிகள் குணமடைவதால், மருத்துவமனைகள் மீதான அழுத்தமும் குறைகிறது.பெங்களூரு மற்றும் தார்வாடின் நிமான்ஸ் மருத்துவமனையில், 'டெலிமனஸ்' பிரிவு செயல்படுகிறது. படிப்படியாக நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.