போதை பார்ட்டி நடத்திய மூவர் கைது
பெங்களூரு: பெங்களூரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி, 'ரேவ் பார்ட்டி' நடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் நள்ளிரவு 1:00 மணி வரை பப், சொகுசு விடுதிகளில் பார்ட்டி நடத்த அனுமதி உள்ளது. இந்த நேரத்தை மீறி, விடிய விடிய 'ரேவ் பார்ட்டி' என்ற பெயரில் மதுபான பார்ட்டி நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அவ்வகையில், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் பகுதியிலுள்ள ஐ.பி.எஸ்., காலனியில் உள்ள பங்களாவில் நேற்று இரவு ரேவ் பார்ட்டி நடப்பதாக, சி.சி.பி., மகளிர் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, மது போதையிலிருந்த, 30க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை எச்சரித்து அனுப்பினர். பார்ட்டியில் பயன்படுத்தப்பட்ட, இ - சிகரெட்டுகள், ஹூக்காக்கள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்த பெங்களூரை சேர்ந்த வாலிபர்களான தீக் ஷித், வேதாந்த் பண்டிட், சங்கர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பல தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் அதிகம் வசிக்கும் ஐ.பி.எஸ்., காலனியில் பார்ட்டி நடத்தினால் போலீஸ் ரெய்டு இருக்காது என முடிவு செய்து, பார்ட்டி நடத்தியுள்ளனர். பங்களாவை, 20,000 ரூபாய் கொடுத்து ஒரு நாளுக்கு வாடகை எடுத்திருந்தனர். இந்த பார்ட்டியில் பங்கேற்பதற்கு ஆண்களுக்கு 1,099 ரூபாயும், பெண்களுக்கு 499 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் செயலி மூலம், பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் எங்கிருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களான ஹூக்கா, இ - சிகரெட்டுகளை வாங்கினர் என்பதையும், பார்ட்டியை ஏற்பாடு செய்ததில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரிக்கின்றனர். பார்ட்டி நடந்த பங்களாவின் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.