அண்ணன் மகனின் நிலம் ஸ்வாகா: நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., சிக்கினார்
நெலமங்களா: அண்ணன் மகனின் 9 ஏக்கர் நிலத்தை அபகரித்த, நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ரூரல் ராஜனுகுண்டேயை சேர்ந்தவர் நஞ்சுண்டய்யா, 55. சென்னபட்டணாவில் நகர ஆயுதப்படை டி.எஸ்.பி.,யாக உள்ளார். இவரது அண்ணன் மகன் மோகன்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் எலஹங்கா, நெலமங்களா, தொட்டபல்லாபூரில் உள்ளது. நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக, நஞ்சுண்டய்யா கூறினார். இதனால் நிலம் தொடர்பான ஆவணங்களை, மோகன் குமார் கொடுத்துள்ளார். ஆனால் நிலத்தை விற்றுக் கொடுக்காமல், நஞ்சுண்டய்யா அபகரித்தார். தனக்கு தெரிந்தவர்களிடம் குறைந்த விலைக்கு, நிலம் தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வாங்கினார். நிலம், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தார். இதுபற்றி அறிந்த மோகன்குமார், நஞ்சுண்டய்யாவிடம் கேட்டபோது, 'உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்' என்று மிரட்டி உள்ளார். நஞ்சுண்டய்யா, அவரது மனைவி லாவண்யா, மகன் ஹேமந்த் குமார் ஆகியோர் மீது, நெலமங்களா போலீஸ் நிலையத்தில் மோகன் குமார் கடந்த மாதம் 30ம் தேதி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தேடி வந்தனர். கனகபுரா சாலை சவுடஹள்ளியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நஞ்சுண்டய்யா, நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடக்கிறது.