ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு எங்கிருந்து பணம் வருகிறது: மாஜி அமைச்சர் கேள்வி
கொப்பால்: ''ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் பணத்தின் மூலம் குறித்து அமலாக்க துறை விசாரணை நடத்த வேண்டும்,'' என, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவராஜ் தங்கடகி கேள்வி எழுப்பி உள்ளார். கொப்பால் மாவட்டம் கங்காவதியில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி சிறப்பாக நடந்து வருகிறது. ஓட்டுகளை திருடுவது சாத்தியமில்லை என்பதால், பா.ஜ.,வுக்கு பதற்றம் ஏற்பட துவங்கி உள்ளது. எஸ்.ஐ.ஆர்., பணியை காங்கிரஸ் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் வாதம். மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் 86 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கு தேர்தல் கமிஷனர் பதிலளிக்க வேண்டும். அயோத்தியில் நன்கொடை நிதியில் நடந்த ஊழல், ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. இப்போது கொப்பால் மாவட்டம், அஞ்சனாத்ரியில் உள்ள நன்கொடை நிறுவனம் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., வந்தால், 'கவனமாக இருங்கள்' என்று சொல்லும் நிலை உருவாகி உள்ளது. 2029 லோக்சபா தேர்தலுக்காக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.