தாய்க்காக ஜீரோ டிராபிக் வசதி ஹாசன் பெண் எஸ்.பி., மீது புகார்
பெங்களூரு: ஹாசன் மாவட்ட எஸ்.பி., முகமத் சுஜிதா, தன் தாய்க்காக, ஹாசனில் இருந்து, பெங்களூருக்கு விதிமீறலாக 'ஜீரோ டிராபிக்' வசதி செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, பா.ஜ., பிரமுகர் தேவராஜேகவுடா, அரசு தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷிடம், ஆவணங்களுடன் நேற்று புகார் அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி: ஐ.பி.எஸ்., அதிகாரியான முகமத் சுஜிதா, ஹாசன் எஸ்.பி.,யாக பணியாற்றுகிறார். கடந்த 25ம் தேதி, இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்சில் பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளார். தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஜீரோ டிராபிக் வசதி செய்து அழைத்து வந்துள்ளார். ஹாசனில் இருந்து, ஜீரோ டிராபிக்கில் பெங்களூருக்கு வர வேண்டும் என்றால், துமகூரு எஸ்.பி., பெங்களூரு ரூரல் எஸ்.பி., பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரிடம், முறைப்படி அனுமதி பெறுவது கட்டாயம். அவசர சூழ்நிலை இருந்தால், ஜீரோ டிராபிக் வசதி செய்ய, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறாமல், ஜீரோ டிராபிக் மூலம், ஹாசனில் இருந்து பெங்களூருக்கு வந்துள்ளார். இதற்காக ஐந்து அரசு வாகனங்களை பயன்படுத்தியுள்ளார். இவர்கள் வரும்போது, வேறொரு ஆம்புலன்ஸ், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய முகமத் சுஜிதாவை, பணி நீக்கம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தலைமை செயலரை சந்தித்தும் புகார் அளித்தேன். கீழ்நிலை அதிகாரிகள் தவறு செய்தால், 'சஸ்பெண்ட்' செய்கின்றனர். உயர் அதிகாரி தவறு செய்தால், அரசின் நிலைப்பாடு என்ன? ஹாசன் எஸ்.பி.,யான முகமத் சுஜிதா, பெங்களூரில் வசிக்கிறார். பெங்களூரில் ஒரு கார் மற்றும் போலீசார், ஹாசனிலும் போலீசாரை பணிக்கு வைத்துள்ளார். இவர் மீது தலைமை செயலர் நடவடிக்கை எடுக்கா விட்டால், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.