கோவையில் ரூ.400 கோடியில் பொது வசதி மைய பணி துவக்கம்
சென்னை:கோவை மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், பொது பொறியியல் வசதி மையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. 'டி.என்.இன்ஜின்' எனும் தமிழக பொறியியல் மற்றும் புத்தாக்க மையம், 'டிட்கோ' நிறுவனம் மற்றும் டாடா டெக்னாலஜிஸ் ஆகியவை இணைந்து, 400 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த பொது வசதி மையத்தை அமைக்கின்றன. இந்த மையம், மேம்பட்ட இயந்திர ஆய்வகம் உள்ளிட்ட ஒன்பது வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆய்வகங்களை கொண்டிருக்கும். இத்திட்டப்பணிகள், இரு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன. முதற் கட்டமாக, நான்கு மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. விமானம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், பரிசோதனை போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், சிறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரிப்புகளை, டி.என்.இன்ஜினில் ஆய்வு செய்யலாம்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய டி.என்.இன்ஜின் பணிகளை, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.