வட இந்திய சந்தையில் 30% அசோக் லேலாண்டு இலக்கு
புதுடில்லி,:நடப்பு நிதியாண்டில் வணிக வாகன துறை வளர்ச்சி ஒற்றை இலக்கில் இருக்குமென கருதுவதாக, அசோக் லேலாண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகன பிரிவு தலைவர் சஞ்சீவ் குமார் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஆண்டில் கனரக தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்ட 3 சதவீத சரிவிற்கு பின், தற்போது மீண்டு வருகிறது. துறையின் வளர்ச்சி சராசரியைவிட அதிக வளர்ச்சியை அசோக் லேலாண்டு பெற இலக்கு வைத்துள்ளது. வணிக வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தை வடமாநிலங்களில் இருப்பதால், அங்கு நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்துவதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். அங்கு தற்போது இந்நிறுவனத்தின் பங்கு குறைவாக உள்ள நிலையில், 30 சதவீத சந்தையை பிடிக்கும் நோக்கில் செயல்படுகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.