உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பவர் பேக்டர் அபராத வசூலிப்பால் சிறுதொழில்கள் பாதிப்பு  என புகார்

பவர் பேக்டர் அபராத வசூலிப்பால் சிறுதொழில்கள் பாதிப்பு  என புகார்

சென்னை:சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட, 'பவர் பேக்டர்' அளவு குறையும்பட்சத்தில், மின் வாரியம் அபராதம் வசூலிக்கிறது. இதனால், அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால், தொழில்முனைவோரிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.தமிழக மின்சார வாரியம், தொழில், வணிக நிறுவனங்களின் மின்நுகர்வை பொறுத்து, 150 கிலோ வாட் வரை தாழ்வழுத்த பிரிவிலும்; அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது. ஒரு நிறுவனம் மின்சாரத்தை பயன்படுத்தும் போது, 'பவர் பேக்டர்' அளவு, ஒன்று என்று இருக்க வேண்டும். அதை விட குறைந்தால், மின்சாரத்தை சீரற்ற முறையில் பயன்படுத்துவதாக கருதப்படுகிறது. அதாவது, பவர் பேக்டர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறையும் போது, ஒரு இயந்திரத்தை இயக்க அதற்கு வழக்கமாக தேவைப்படும் மின்சாரத்தை விட, அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நிர்ண யிக்கப்பட்டுள்ளதை விட, பவர் பேக்டர் அளவு குறையும் நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, பவர் பேக்டர் அளவு, ஒன்றில் இருந்து, 0.85 சதவீதம் வரை இருந்தால், அபராதம் கிடையாது. 0.85ல் இருந்து, 0.75 சதவீதம் குறையும்போது, ஒவ்வொரு 0.01 புள்ளிக்கும், மாதாந்திர மின் பயன்பாட்டு கட்டணத்தில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது, பல நிறுவனங்களுக்கும் இந்த அபராதம் விதிக்கப்படுவதால், தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அபராதம் விதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

மின் வாரிய தரப்பு

ஆலையில் உள்ள இயந்திரங்களின் திறன் குறைந்திருந்தால் தான் பவர் பேக்டர் அளவில் மாறுபாடு ஏற்படும். இதனால், பெறப்பட்ட மின் இணைப்பை விட அதிக மின்சாரம் பயன்படுத்தும் நிலை ஏற்படும். உதாரணமாக, 10 யூனிட் மின்சாரம் பயன்படுத்த வேண்டிய சாதனத்தில், 15 யூனிட் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. மின் இணைப்பு பெற்ற அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்துவதால், மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க அபராதம் வசூலிக்கப்படுகிறது. 'கெபாசிடர்' கருவியை பொருத்தினால், பவர் பேக்டர் அளவில் மாறுபாடு ஏற்படாது. இதன் விலை யும் குறைவு தான். இந்த கருவியை ஆலைகள் பொருத்தினால் அபராதம் வர வாய்ப்பில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
அக் 20, 2024 08:31

புரியவே இல்லை, பவர் பெக்டர் variations அதிகரித்தால் நீங்க சொல்றது சரி , ஆனா குறைந்தால் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை