முக்கிய துறைகள் வளர்ச்சி செப்டம்பரில் குறைந்தது
புதுடில்லி: நாட்டின் முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மூன்று சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் வளர்ச்சி 6.30 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு செப்டம்பரில் 2.40 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், ஸ்டீல், சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இதில் நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி சரிந்ததே, கடந்த மாதம் வளர்ச்சி குறைய முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரம் மற்றும் சிமென்ட் உற்பத்தி வளர்ச்சி முறையே 1.60 சதவீதமாகவும்; 5.30 சதவீதமாகவும் குறைந்துள்ளன. ஸ்டீல் மற்றும் மின்சார உற்பத்தி வளர்ச்சி முறையே 14.10 சதவீதமாகவும்; 2.10 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் சராசரி வளர்ச்சி 2.90 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 4.30 சதவீதமாக இருந்தது. நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் இவை 40.27 சதவீத பங்கு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.