கம்பம்:இந்தியாவின் ஏலக்காய் ஏற்றுமதி 12,000 டன் முதல் 14,000 டன் வரை உயரும் என்றும், ரம்ஜான் ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் ஏலக்காய் ஏல மைய வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவ குணம் கொண்ட ஏலக்காய் கேரளாவில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. சர்வதேச அளவில் இந்திய ஏலக்காய்க்கு கவுதமாலா நாட்டு ஏலக்காய் போட்டியாக இருந்தது. அங்கு மானாவாரியாக விளைவதால், குறைந்த விலைக்கு ஏலக்கா ய் விற்பனை செய்தனர். ஆனால், கேரளாவில் ஒரு கிலோ உற்பத்திற்கு குறைந்தது 1,200 ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். எனவே, சர்வதேச அளவில் உற்பத்தி, விற்பனையில் கவுதமாலா ஏலக்காய் முதலிடம் பெற்றது. இந்நிலையில், கடும் வறட்சியால் கவுதமாலாவில் ஏலக்காய் சாகுபடியில் பலத்த அடி விழுந்துள்ளது. இயல்பாக 40,000 முதல் 50,000 டன் வரை உற்பத்தி செய்யும் கவுதமாலா, இந்தாண்டு 14,000 முதல் 17,000 டன் என்ற சரிவை சந்தித்தது. தற்போது ரம்ஜான் மாதத்துக்கான கொள்முதல் நடக்கும் காலம். இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வளைகுடா நாடுகள் இந்திய ஏலக்காயை மட்டுமே நம்பியுள்ளன. இப்போதே ஆர்டர்கள் கிடைக்க துவங்கியுள்ளன. இயல்பாக இந்தியா 6,000 முதல் 8,000 டன் வரை ஏற்றுமதி செய்யும். ஆனால், இந்தாண்டு 12,000 முதல் 14,000 டன் வரை ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஏலக்காய் ஆக் ஷன் மைய வட்டாரங்கள், '2025ல் ஏல மையங்களுக்கு விற்பனைக்கென 30,000 டன் ஏலக்காய் வந்துள்ளது. 'தற்போது ரம்ஜான் ஆர்டர்கள் கிடைக்க துவங்கியுள்ளது. கவுதமாலாவில் மகசூல் பாதிப்பால் இந்திய ஏலக்காய்க்கு வாய்ப்புள்ளது. 8 எம்.எம்., போல்ட் காய்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டிலும் ஏலக்காய் ஏற்றுமதி அதிகரிக்கும்' என தெரிவித்தன.