| ADDED : ஆக 29, 2026 04:26 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி துறைமுகத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் ஒன்றான துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சரக்கு கையாளுதல், சேமித்தல் மற்றும் சரக்குகளை வெளியேற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் துறைமுக நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சரக்கு பெட்டகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 7 வது சரக்கு தளம் 517 கோடி ரூபாய் மதிப்பில் நவீன சரக்கு பெட்டக முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 4 லட்சத்து 20,000 சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டதாக இந்த முனையம் உருவாக்கப்படுகிறது. 370 மீ. நீளமுள்ள இந்த சரக்கு தளம், 11.70 மீட்டர் ஆழத்திலிருந்து 14.20 மீட்டர் ஆழமாக மேம்படுத்தப்பட்டு, அதிகபட்சமாக 12,100 சரக்கு பெட்டகங்கள் கொள்ளளவு கொண்ட கப்பல்களை கையாளும் வகையில் உருவாக்கப்படுகிறது. 2029 மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 87 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் மே ற்கொள்ளப்பட்டு வரும் பத்தாவது சரக்கு தளத்தில் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. 61 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக 40 ஏக்கர் பரப்பளவில் சுங்க கட்டுப்பாட்டு பகுதியை உருவாக்கி வருகிறது. துறைமுகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், 72 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கடல்நீரை 'தலைகீழ் சவ்வூடுபரவல்' முறையில் நன்னீராக்கும் ஆலை நிறுவப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2027 ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.