| ADDED : நவ 26, 2025 02:06 AM
சென்னை:மீன் வளம், கப்பல் போக்குவரத்து போன்றவற்றை உள்ளடக்கிய நீல பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக, சென்னையில் நேற்று முன்தினம் நடந்த இரு மாநில தொழில் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாட்டில், தமிழகமும், கேரளாவும் மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளன. இரு மாநிலங்களுக்கும், பிற மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்நிலையில், கேரளா தொழில் துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் அதிகாரிகள், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய் உடன் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, மீன் வளம், கடலோர சுற்றுலா, கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய நீலப் பொருளாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுற்றுலா, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில், இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.