சரக்கு பெட்டகங்கள் கையாள்வதில் துாத்துக்குடி துறைமுகம் 7 சதவிகிதம் வளர்ச்சி
துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சரக்குப் பெட்டகங்களை கையாளுவதில், நடப்பு நிதியாண்டு டிசம்பர் மாதம் வரை, 5.82 லட்சம் சரக்கு பெட்டகங்களை துறைமுகம் கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 5.44 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. தற்போது 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.துறைமுகத்திற்கு சரக்கு பெட்டக கப்பல் வந்து செல்வதற்கான நேரம் சராசரியாக 19.92 மணி நேரமாகும். பெருந்துறைமுகங்களை பொறுத்தவரை, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதன்மை இடத்தை பிடித்து, தன் நிலைப்பாட்டை இரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளது.உலக தரத்திற்கு இணையாக, ஒரு மணி நேரத்துக்கு 30 சரக்குப் பெட்டக நகர்வுகளை கையாளும் திறனுடன் செயல்பட்டு வருகிறது. துாத்துக்குடியை சுற்றி அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைகளால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் சரக்கு பெட்டகங்களைக் கையாண்டு, துறைமுகம் பெரும் வளர்ச்சியைக் காணும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.