| ADDED : மே 11, 2024 08:26 PM
புதுடில்லி:ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், கடந்த மார்ச் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாக, 'எஸ்., அண்டு பி., குளோபல்' ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆசிய - பசிபிக் பிராந்தியம் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளை உள்ளடக்கியது. இப்பிராந்தியத்தில், கடந்த மார்ச் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள், முந்தைய ஆண்டை விடவும், 14 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிக முதலீட்டு செலவுகள் மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் ஆகியவை, சரிவு ஏற்படுவதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு மற்றும் மீள்தன்மை வலுவாக இருந்த காரணத்தால், இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில், இந்தியா முன்னிலை வகிக்கிறது.மற்ற நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டு அளவை விடவும் குறைந்துள்ளது; அல்லது, அதற்கு நிகராக உள்ளது. ஆனால், இந்தியாவில் இது அதிகரித்து உள்ளது.