தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் கட்டுமான பொறியியல் சிறப்பு மையம் கிரெடாய் அமைப்பு ஒப்பந்தம்
சென்னை:சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில், கட்டுமான பொறியியலுக்கான சிறப்பு மையம் அமைக்க, 'கிரெடாய்' அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தரமணியில் மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டுமான பொறியியல் உட்பட பல்வேறு பிரிவுகளில் பட்டய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், கட்டுமான பொறியியல் தொடர்பாக பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதற்காக பல நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. இந்த வகையில் தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில் கட்டுமான நடைமுறைகளுக்கான சிறப்பு மையம் ஏற்படுத்த, அந்நிறுவனத்துடன், கிரெடாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து கிரெடாய் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் முகமது அலி கூறுகையில், “கட்டுமான பொறியியல் பிரிவு மாணவர்கள் கற்றலுடன், நேரடி பணி அனுபவத்தை பெற இந்த மையம் உதவும். எங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள கட்டுமான நிறுவனங்கள் இதற்கான வாய்ப்புகளை வழங்கும். தொ ழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டுமான பணி மேற்பார்வையாளர்களை இங்கு நாங்கள் உருவாக்க இருக்கிறோம்” என்றார்.