சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை, தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது. தற்போது, இந்நிறுவனம் மாநிலம் முழுதும், 8,600 ஏக்கரில், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய தொழிற்பேட்டையான சென்னை கிண்டி தொழிற்பேட்டைக்குள், சிலர் தங்களின் பழைய மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி விட்டு, பல மாதங்களாக எடுக்காமல் உள்ளனர். மேலும், காலி இடங்களில் கட்டட கழிவுகளை இரவில் கொட்டுவதுடன், சாலையில் கடைகளும் வைத்துள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிற்பேட்டைகளின் மொத்த நிலத்தில், 5 - 10 சதவீத இடங்கள் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. இதனால், தொழிற்பேட்டைக்குள் உள்ள நிறுவனங்கள், தங்களுடைய மூலப்பொருட்களை எடுத்து வரவும், உற்பத்தி பொருளை அனுப்பவும் சிரமப்படுகின்றன. எனவே, தொழிற்பேட்டைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, சிட்கோ உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் சாலைகளை ஆக்கிரமித்திருந்த வாகனங்கள், கடைகள், கட்டட கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டன.