உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புவிவெப்ப எரிசக்தி உற்பத்தி கொள்கை வெளியிட்டது இந்தியா

புவிவெப்ப எரிசக்தி உற்பத்தி கொள்கை வெளியிட்டது இந்தியா

புதுடில்லி, செப். 17-நாட்டின் முதல் தேசிய புவிவெப்ப எரிசக்தி கொள்கையை, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் வாயிலாக, துாய்மை எரிசக்தி உற்பத்திக்காக பூமிக்கு அடியில் உள்ள வெப்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பயன்படுத்தப்படாத புவிவெப்ப எரிசக்தி திறனை, சலுகைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வாயிலாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவதே இந்த கொள்கையின் நோக்கமாகும். மேலும், கைவிடப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை புவிவெப்ப எரிசக்தி உற்பத்திக்காக மீண்டும் பயன்படுத்தவும், வெப்பமூட்டுதல் மற்றும் குளிரூட்டுதலுக்காக 'கிரவுண்ட் சோர்ஸ் ஹீட் பம்ப்'களை பயன்படுத்தவும் இது வழிவகுக்கிறது. 'ஜியோ தெர்மல் எனர்ஜி' எனும் புவிவெப்ப எரிசக்தியை பெற, பூமியின் ஆழத்தில் துளையிட்டு, வெப்பமான நீரை வெளியேற்றி, மின்சாரமாக மாற்றப்படுகிறது. புவிவெப்ப மின் உற்பத்தி நிலையங்கள், பூமிக்கு அடியில் உள்ள சூடான நீர் அல்லது நீராவி வாயிலாக டர்பைன்களை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின் உற்பத்தி நிலையங்கள், புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட மின்சாரத்தை விட, கிட்டத்தட்ட 99 சதவீதம் கு றைவாக கார்பன் உமிழ்கின்றன. புதிய கொள்கையின்படி, 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு, குறைந்த வட்டியில் கடன்கள், மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கு வழிவகை செய்யப்படும். புவிவெப்ப எரிசக்தி திட்டங்களுக்கு 30 ஆண்டுகள் வரை ஆதரவு அளிக்கப்படும். மேலும், வரி விலக்குகள், இறக்குமதி வரி விலக்குகள் போன்ற நிதி சலுகைகளும் வழங்கப்படும்.  நம் நாட்டில் மொத்தம் 381 வெந்நீர் ஊற்றுகளும், 10 புவிவெப்ப மண்டலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன  இதில் லடாக், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவிலான இடங்கள் உள்ளன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை