கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.355 ஆக நிர்ணயம்
புதுடில்லி:வரும் அக்டோபரில் துவங்கும் கரும்பு சாகுபடி பருவத்தில், சர்க்கரை ஆலைகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவின்டாலுக்கு 355 ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு 2024 -- 25ம் பருவத்தில், குவின்டாலுக்கு 340 ரூபாயாக இருந்த நிலையில், 2025 - -26 பருவத்துக்கான கரும்பு கொள்முதல் விலை தற்போது 15 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.இதனால், 5 கோடி விவசாயிகள், 5 லட்சம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பயனடைவர்.எனினும், பிழிதிறன் 9.50 சதவீதத்துக்கு குறைவான கரும்புக்கான ஆதார விலை 329.05 ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிழியும்போது கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவு அடிப்படையில், ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதிக சர்க்கரை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் கரும்பின் பிழிதிறனுக்கு ஏற்ப சந்தையில் விலை கிடைக்கும்.
ஏற்றுமதி
நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி, நடப்பு பருவத்தில் 8 லட்சம் டன்னாக இருக்கும் என, மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்து உள்ளார். செப்டம்பருடன் முடிவடையும், 2024- -25ம் ஆண்டுக்கான பருவத்தில், 10 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. நடப்பு சீசனில், கடந்த ஜனவரியில் இருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து தற்போது வரை 3 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 60,000 டன் சர்க்கரை, துறைமுகங்களில் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ளது. மொத்த ஒதுக்கீட்டில், 8 லட்சம் டன் அளவுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய உள்ளோம் என அவர் கூறினார்.