புதுடில்லி, 'டில்லி மாநகராட்சிக்கு, நியமன கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கு துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு, அமைச்சரவையின் ஆலோசனையை கேட்க தேவையில்லை' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. அரசுக்கும், டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. டில்லி மாநகராட்சி கவுன்சிலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 250 பேர் உள்ளனர். இது தவிர, 10 நியமன உறுப்பினர் பதவிகளும் உள்ளன. நிர்வாக குழப்பம்கடந்த 2022 டிசம்பரில் நடந்த தேர்தலில், ஆம் ஆத்மி, 134 வார்டுகளில் வென்றது. இதன் வாயிலாக, 15 ஆண்டுகளாக பா.ஜ., வசம் இருந்த மாநகராட்சியை, ஆம் ஆத்மி கைப்பற்றியது. அந்த தேர்தலில் பா.ஜ., 104 இடங்களிலும், காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் வென்றன.இந்நிலையில், 10 நியமன கவுன்சிலர்களை, துணை நிலை கவர்னர் தேர்வு செய்தார். இது, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், டில்லி அமைச்சரவையின் ஆலோசனைகளின்படியே, நியமன உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றும் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்த்திவாலா அமர்வு, 15 மாதங்களுக்கு முன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பின்னடைவுஅதில் கூறப்பட்டு உள்ளதாவது:டில்லி மாநகராட்சி சட்டம் - 1957, ஒவ்வொருவருக்குமான அதிகாரத்தை குறிப்பிடுகிறது. கடந்த 1993ல் இதில் திருத்தம் செய்யப்பட்டது.அதன்படி, சிறப்பு அனுபவம், திறன் உள்ளவர்களை, மாநகராட்சிக்கு நியமிக்க, துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.இந்த சட்ட திருத்தத்தின்படி, நியமன உறுப்பினர்களை நியமிப்பது, அரசு நிர்வாகத்தின் அதிகாரமாக தரப்படவில்லை. மாறாக கவர்னரின் சட்டப்பூர்வ கடமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபைகளில் நியமன எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் நியமிக்கிறார்.அதுபோல, டில்லி மாநகராட்சி கவுன்சிலில், நியமன உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, துணை நிலை கவர்னருக்கே அதிகாரம் உள்ளது. இதற்காக, மாநில அரசின் பரிந்துரையை அவர் பரிசீலிக்கத் தேவையில்லை. அமைச்சரவையின் ஆலோசனையையும் கேட்க வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவை, பா.ஜ., தலைவர்கள் வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி எதிர்ப்பு
இந்த உத்தரவு குறித்து, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறிய தாவது:தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை புறக்கணிக்கும் வகையில், துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. துணை நிலை கவர்னர் வாயிலாக, டில்லியை நிர்வகிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதை உறுதி செய்யும் வகையிலான இந்த உத்தரவை, மிகவும் மரியாதையுடன் எதிர்க்கிறோம்.இது, ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.