| ADDED : ஜூன் 09, 2024 03:47 AM
பெங்களூரு, ; 'டில்லியில் உள்ள காங்கிரஸ் கலெக்ஷன் ஏஜென்டுகள், விரைவில், கர்நாடகாவுக்கு வருகை தரும் வாய்ப்புள்ளது' என, கர்நாடக பா.ஜ., தெரிவித்துள்ளது.இதுகுறித்து, 'எக்ஸ்' எனும் சமூக வலைதளத்தின் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், கர்நாடக பா.ஜ.,வின் நேற்றைய பதிவு:சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலத்தின் மோசமான ஊழல் அரசு. இந்த அரசில் ஊழல் எல்லை மாறியுள்ளது.முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில், வருவாய்த்துறையில் செலுத்தும் தொகை அனைத்தும், ஊழியர்களின் தனிப்பட்ட கணக்குக்கு செல்கிறது என்றால், இந்த அரசு எப்படிப்பட்ட ஊழல் அரசு என்பது தெரிகிறது.டில்லியில் உள்ள காங்கிரஸ் கலெக்ஷன் ஏஜென்டுகள், விரைவில், நம் மாநிலத்துக்கு வருகை தரும் வாய்ப்புள்ளது. மேம்பாட்டு ஆணையங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், தனியார் வங்கிகளில் செலுத்தப்படுகிறது. வருவாய்த்துறையில் செலுத்தப்படும் வரி பணமே, கொள்ளை அடிக்கப்படுகிறது.இன்னும் எத்தனை தேர்தலுக்கு, பணம் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளீர்கள்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.