பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி
லக்னோ, உ.பி., மாநிலம் பெரேசோபாத் மாவட்டத்தின் ஷிகோபாபாத் அருகேயுள்ள நவ்ஷேரா குடியிருப்பு பகுதியில் பட்டாசு ஆலை மற்றும் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், கட்டடம் இடிந்து அருகில் உள்ள வீடுகளில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 11 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பலியானோர் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஒரு குழந்தை இன்னும் அடையாளம் காணப்படவில்லை. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.