| ADDED : செப் 17, 2024 05:06 PM
ஐதராபாத்: 'நான் பண்ணை வீட்டு முதல்வர் அல்ல, மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கு டில்லி செல்வதில் எந்த ஈகோவும் இல்லை,' என பி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர் ராவை கடுமையாக விமர்சித்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.ஐதராபாத்தில் நடந்த தெலுங்கானா பிரஜா பலனா தினோத்சவம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேசியதாவது: தெலுங்கான அரசின் நிதி நிலைமையை சரிசெய்வது மற்றும் 6 தேர்தல் உத்தரவாதங்களை செயல்படுத்துவது என்ற சவால்களை காங்கிரஸ் அரசு கையில் எடுத்துள்ளது. 7 லட்சம் கோடி கடன்களை மறுகட்டமைப்பதன் மூலமும், வருவாய் கசிவை அடைப்பதன் மூலமும், மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க, அரசு செயல்பட்டு வருகிறது.மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய ஒவ்வொரு பைசாவையும் பெற, நாங்கள் கடுமையாக முயற்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக, பலமுறை டில்லிக்கு சென்று, பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து, மனு அளித்துள்ளேன். எனது டில்லி பயணங்கள் தொடர்ந்து வருகின்றன. எதுவும் செய்யாமல் வீட்டில் இருக்க, நான் பண்ணை வீட்டு முதல்வர் அல்ல. நான் எனது தனிப்பட்ட வேலைக்காக டில்லி செல்லவில்லை. டில்லி, பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ இல்லை. இது, நம் நாட்டின் தலைநகரம்,' என ரேவந்த் ரெட்டி கூறினார்.மேலும், கூட்டாட்சி அமைப்பில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கும் என்றும், வரியில் மாநிலத்துக்கு உரிய பங்கைப் பெற டில்லி செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.