விநாயகர் பூஜையில் நான் பங்கேற்றதால் எதிர்க்கட்சிகள் கோபம்: பிரதமர் மோடி
புவனேஸ்வர், விநாயகர் பூஜையில் நான் பங்கேற்றதால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போலவே, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் கோபத்தில் உள்ளனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, மகளிருக்கு உதவித் தொகை வழங்கும் சுபத்ரா திட்டம் மற்றும் 3,800 கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.அப்போது, 20 லட்சம் மகளிருக்கு வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்துவதை அவர் துவக்கி வைத்தார்.இதைத்தவிர, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பலன் பெற்றவர்களுக்கு வீடுகளை ஒப்படைத்தார். பயனாளி ஒருவரின் வீட்டில் அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.100 நாட்களில்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாளில், என் தாயை சந்தித்து ஆசி பெறுவேன். அப்போது அவர் எனக்கு இனிப்பு வழங்குவார். தற்போது பழங்குடியின தாய் ஒருவர் என் பிறந்த நாளில் இனிப்பு வழங்கியுள்ளார். இது என் தாய் வழங்கியதாக உணர்கிறேன்.மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்த 100 நாட்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டப் பணிகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.மூன்று கோடி ஏழை மக்களுக்கு வீடு, இளைஞர்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள், 75,000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள், 25,000 கிராமங்களை இணைக்கும் சாலைகள் என, அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் பூஜையில் சமீபத்தில் பங்கேற்றேன். ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் அதை விமர்சித்தனர். ஆட்சி அதிகார பசியில் உள்ள அவர்கள், நாட்டை பிளவுபடுத்துவதுடன், பண்டிகைகளில் பங்கேற்பதையும் பிரச்னையாக பார்க்கின்றனர்.எதிர்ப்புவிநாயகர் பூஜை என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல. அது நம் நாட்டுப்பற்றுடன் தொடர்புடையது. விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையது.பிரிட்டிஷ் ஆட்சியின்போது, மக்களை பிளவுபடுத்தி வேறுபடுத்தும் கொள்கையை பின்பற்றினர். அவர்களும் விநாயகர் பூஜைகளை எதிர்த்தனர். மதம், ஜாதி அடிப்படையில் மக்களை பிரித்து வைத்தனர். அப்போது லோகமான்ய திலகர், விநாயகர் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அது, நாடு முழுதும் மக்களிடையே சுதந்திர உணர்வை துாண்டியது; மக்களை ஒற்றுமைப்படுத்தியது.தற்போது அதுபோன்ற பிளவுபடுத்தும் நோக்கம் உள்ளவர்கள், நான் விநாயகர் பூஜையில் பங்கேற்றதை எதிர்த்துஉள்ளனர்.இதற்கு ஒருபடி மேலாகச் சென்று, கர்நாடகாவில், விநாயகரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அது தொடர்பான படம் வெளியாகி, நாட்டு மக்களிடையே மனவேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் பேசினார்.