| ADDED : ஜூலை 03, 2024 10:29 PM
பெங்களூரு : ''ராகுலை குழந்தை மனம் கொண்டவர், 'பச்சா' என பிரதமர் மோடி அழைத்தார். இதனால், குழந்தைகள் அவமதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பிரதமர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இது பெருமை தராது. அரசியல் உள்நோக்கத்தோடு, எமர்ஜென்சி குறித்து பேசியது, உண்மைக்கு புறம்பானது. இந்திராவின் எமர்ஜென்சியின் காரணம், பொது வெளியில் அதிகம் விவாதிக்கப்பட்டதில்லை. எமர்ஜெனசி என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான விஷயம் அல்ல.எமர்ஜென்சியை அமல்படுத்துவது என்பது அரசியல் அமைப்பு சட்டமே அளித்துள்ள ஒரு விதி. லோக்சபாவில் தனது உரையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, மோடி அவமதித்தார். ராகுலை குழந்தை மனம் கொண்டவர், 'பச்சா' என அழைத்தார். இதனால் குழந்தைகள் அவமதிக்கப்பட்டு உள்ளனர்.நாட்டிற்கு என்ன செய்வேன் என்று தனது உரையில் கூறவில்லை. சீன ஆக்கிரமிப்பு; மணிப்பூர் சம்பவம் பற்றி எதுவும் பேசவில்லை. இவ்வளவு கீழ்த்தரமான பேச்சை, எந்த பிரதமரும் பேசி பார்த்ததில்லை. அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசினார்.தனது உரையில், விவேகானந்தர் பற்றி பேச, அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவரின் பேச்சில், ஏமாற்றம் இருப்பது போன்று தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.