புனே: புனேவில் இருந்து டில்லி செல்லும் விமானத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர், சி.ஐ.எஸ்.எப்., காவலர்கள் மற்றும் இரண்டு சக பயணிகளை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதல்
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து, புதுடில்லி செல்லும் விமானத்தில் 44 வயதான சுரேகா சிங் என்ற பெண் ஏறினார். அவருக்கும் சக பயணிகளான அன்விதிகா போர்ஸ் மற்றும் ஆதித்யா போர்ஸ் ஆகியோருடன் இருக்கை ஏற்பாடுகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அண்ணன், சகோதரி இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துள்ளதாக கூறியதால், சுரேகா சிங் ஆத்திரம் அடைந்தார். வாக்குவாதம் கை கலப்பாக மாறியது. அப்போது தான், சி.ஐ.எஸ்.எப்., பெண் காவலர்கள் பிரச்னையை சரி செய்ய முயற்சித்தனர். அவர்களையும் தாக்கிய சுரேகா, சரமரியாக கடித்துக் குதறினார். நிலைமை மோசமடைந்ததால், இறுதியாக சுரேகா சிங் மற்றும் அவரது கணவரை விமானத்திலிருந்து வெளியேற்றினர். புகார்
சுரேகா சிங் ஒரு இல்லத்தரசி, அவரது கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர். உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர்கள் டில்லி சென்றனர். விமான நிலைய போலீசில் சுரேகா மீது புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதிக துயர நிலை
“தனிப்பட்ட அவசர நிலை காரணமாக, சுரேகா சிங் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகத் தோன்றியது. சக பயணிகளுடன் அவர் வாக்குவாதத்திற்குப் பிறகு, விமானி அவர்களுடன் செல்ல அனுமதி மறுத்துவிட்டார். விசாரணைக்கு ஆஜர் ஆக கூறி, நோட்டீஸ் வழங்கிய பிறகு நாங்கள் சுரேகா சிங்-ஐ விடுவித்தோம்'' என மூத்த இன்ஸ்பெக்டர் அஜய் சங்கேஸ்வரி கூறினார்.