உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை ஒத்தி வைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணை ஒத்தி வைப்பு

புதுடில்லி:தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்தது. தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, 2023 ஜூன் 14ல், அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைதான போது, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சில மாதங்களுக்கு பின், ராஜினாமா செய்தார். ஓராண்டுக்கும் மேல் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.ஜாமினை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, செந்தில் பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அமலாக்கத் துறை கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறது; அனுமதிக்கக் கூடாது என கூற, இதை ஏற்ற அமர்வு, வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை