| ADDED : ஆக 08, 2024 01:20 AM
புதுடில்லி, மத்திய அரசால் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உயரிய அறிவியல் விருதான 'விஞ்ஞான் ரத்னா புரஸ்கார்' பெறும் முதல் நபர் என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த உயிரி வேதியியல் விஞ்ஞானி ஜி.பத்மநாபன் பெற்றுள்ளார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய அறிவியல் விருதுகளை இந்தாண்டு அறிமுகப்படுத்தியது.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு 'விஞ்ஞான் ரத்னா' விருதும், சிறந்த பங்களிப்பு அளித்தவர்களுக்கு 'விஞ்ஞான் ஸ்ரீ' விருதும், இளம் விஞ்ஞானிகளின் சாதனைகளை ஊக்குவிக்க 'விஞ்ஞான் யுவா' விருதும், குழுவாக சாதித்தவர்களுக்கு 'விஞ்ஞான் குழு' விருதும் வழங்கப்பட உள்ளன. இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். கடந்த ஜனவரியில் இந்த விருதுக்கான பரிந்துரைகள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு, நேற்று விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரும், உயிரி வேதியியல் துறை விஞ்ஞானியுமான ஜி.பத்மநாபனுக்கு விஞ்ஞான் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தவிர தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேருக்கு விஞ்ஞான் ஸ்ரீ விருதும், சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் பிரபு ராஜகோபால் உள்ளிட்ட 18 பேருக்கு விஞ்ஞான் யுவா விருதும், சந்திரயான் - 3 திட்ட குழுவுக்கு, விஞ்ஞான் குழு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.