உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராக வியூகம்; ராகுல், கார்கேயுடன் சித்து, சிவகுமார் ஆலோசனை

பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராக வியூகம்; ராகுல், கார்கேயுடன் சித்து, சிவகுமார் ஆலோசனை

'மூடா' முறைகேட்டால், கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து, காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுடன், முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக காங்., தலைவர்கள், டில்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்படி, காங்., மேலிடம் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் மனைவி பார்வதிக்கு, மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாகவும் மூன்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் விசாரணை நடத்த இம்மாதம் 17ம் தேதி, கவர்னர் அனுமதி அளித்தார். இதை திரும்ப பெறும்படி வலியுறுத்தி, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கவர்னருக்கு எதிராக நேற்று முன்தினம் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு விமானம்

இதையடுத்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வர், ஜார்ஜ், ஜமீர் அகமது கான், பிரியங்க் கார்கே, திம்மாப்பூர், மஹாதேவப்பா, முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா உட்பட சிலர் நேற்று காலை 11:00 மணிக்கு, சிறப்பு விமானம் மூலம் பெங்களூரில் இருந்து டில்லி சென்றனர்.டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுடன் ஆலோசனை நடத்தினர். காங்., தேசிய அமைப்பு பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் இருந்தனர்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. சட்ட வல்லுனர்களையும் வரவழைத்து, முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்ததில் ஏதாவது சட்ட சிக்கல் ஏற்படுமா; முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்குமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அதே வேளையில், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி, அவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும்படி, காங்., மேலிடம் வியூகம் வகுத்து தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட சிலருக்கு நெருக்கடி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி

கூட்டத்துக்கு பின், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:முதல்வர் எந்த முறைகேடும் செய்யவில்லை. அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஆதரவாக நிற்போம். ஒற்றுமையாக இருப்போம். ஏழை மக்களுக்கு, ஐந்து வாக்குறுதி திட்டங்களால், ஆண்டுக்கு 56,000 கோடி ரூபாய் செலவு செய்கிறோம்.இதனால், கர்நாடகாவின் 4 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதை பா.ஜ., தலைவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை. நாட்டின் மூத்த முதல்வராக இருப்பவர் சித்தராமையா. அவர் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதை, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கவர்னர் முடிவுக்கு எதிராக சட்ட போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும். கவர்னரின் செயல்பாட்டை கண்டித்து, விரைவில் ஜனாதிபதியிடமும் புகார் அளிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

விளக்கம்

முதல்வர் சித்தராமையா கூறியதாவது:கர்நாடக அரசியல் சூழ்நிலை குறித்து, காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு விளக்கப்பட்டது. என் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்தனர். கவர்னரின் முடிவு சட்டத்துக்கு விரோதமானது; அரசியல் அமைப்புக்கு எதிரானது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வரும் 29ம் தேதி மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. நீதி மீது நம்பிக்கை உள்ளது. கவர்னர் என் மீது விசாரணைக்கு அளித்த அனுமதியை, அவரே திரும்ப பெறுவார்.இவ்வாறு கூறினார்.முதல்வருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்கள் இருப்பர் என்று கார்கே, ராகுல் உறுதி அளித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி நடக்கிறது. இதை விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். ஏழைகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும்படி மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.சிவகுமார், துணை முதல்வர்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை