உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலை குறிவைப்பது ஏன்? ஆம் ஆத்மி எம்.பி., கேள்வி

கெஜ்ரிவாலை குறிவைப்பது ஏன்? ஆம் ஆத்மி எம்.பி., கேள்வி

புதுடில்லி:“டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். சிறையில் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படலாம்,”என, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறினார்.புதுடில்லி நிருபர்களிடம் சஞ்சய் சிங் நேற்று கூறியதாவது:திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜ., மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டி வருகிறது. சிறையில் அவரது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம்.இதுபற்றி, தேர்தல் ஆணையம் மற்றும் ஜனாதிபதியிடம் ஆம் ஆத்மி தலைவர்கள் முறையிடுவர். இன்சுலின் உள்ளிட்ட மருந்துகள் கேட்டு, சிறைத்துறை அதிகாரிகளிடம் கெஜ்ரிவால் விண்ணப்பித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவு மற்றும் இன்சுலின் ஆகியவற்றை மறுத்து அவரை கொல்ல சதி செய்கின்றனர். மத்திய அரசு, அமலாக்கத் துறை மற்றும் திஹார் சிறை நிர்வாகம் ஏன் கெஜ்ரிவாலுக்கு எதிராக சதி செய்கின்றனர்?சுதந்திரப் போராட்ட காலத்தில் இதுபோன்று கைதிகளை சிறையில் சித்திரவதை செய்தனர். அது இப்போது மீண்டும் நடக்கிறது.எந்த சட்ட விதிமுறையின் கீழ், திஹார் சிறை நிர்வாகம், கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து அமலாக்கத் துறைக்கு தகவல் தெரிவித்தது.சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து விசாரிப்பதுதான் அமலாக்கத் துறையின் வேலை. அதைவிடுத்து, கெஜ்ரிவாலை குறிவைத்து வேலை செய்வது ஏன்?கெஜ்ரிவாலுக்கு நீரிழிவு குறைபாடு இருக்கும் நிலையில், சிறையில் தினமும் மாம்பழம் மற்றும் இனிப்பு சாப்பிடுவதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூறியுள்ளது. இது, இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத பணி. இந்த தகவலை சிறை நிர்வாகம் ஏன் அமலாக்கத் துறையுடன் பகிந்து கொண்டது. நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை, பா.ஜ.,வினர் கேலி செய்கின்றனர். அவரைப் பற்றி தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பி விடுகின்றனர். சிறை விதிமுறைப்படி ஒரு கைதியில் உடல்நிலை தொடர்பான தகவலை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.கடந்த 12ம் தேதி கெஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 320 ஆக இருந்தது. அதுவே மறுநாள் 270 ஆகவும், 14 மற்றும் -15 ஆகிய தேதிகளில் 300ஆகவும், 16ம் தேதி 250, 17ம் தேதி 280 ஆகவும் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தெற்கு டில்லி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ராம்வீர் சிங் பிதுரி, “திஹார் சிறையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உணவியல் நிபுணர் பரிதுரைப்படிதான் உணவு வழங்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்