ரேவ் பார்ட்டியில் போதையில் ஆட்டம்: 35 பெண்கள் உட்பட 150 பேர் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: பெங்களூரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி, 'ரேவ் பார்ட்டி' நடந்தது. போதையில் ஆட்டம் போட்ட, 35 இளம்பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரில் அதிகாலை, 1:00 மணி வரை பப், சொகுசு விடுதிகளில் பார்ட்டி நடத்த அனுமதி உள்ளது. இந்நேரத்தை மீறி பார்ட்டி நடத்துவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெங்களூரு தெற்கு மாவட்டம், ககலிபுரா அருகே தசாக்சகெரேயில், சுஹாஸ் கவுடா என்பவருக்கு சொந்தமான, 'அயனா' என்ற, 'ஹோம் ஸ்டே'யில் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணி வரை, லேசர் விளக்குகளை ஜொலிக்கவிட்டு, டி.ஜே., இசைக்கு நடனமாடும், 'ரேவ் பார்ட்டி' நடந்தது. தகவலறிந்த ககலிபுரா போலீசார், 'ஹோம் ஸ்டே'க்கு சென்றனர். அங்கு நடனமாடி கொண்டிருந்த 35 இளம்பெண்கள், மூன்று சிறுவர்கள் உட்பட, 150 பேரை கைது செய்தனர். அங்கு போதைப் பொருட்களும் சிக்கின. கைதானவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனரா என்பதை கண்டறிய, ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவ சோதனைக்கு பின், அனைவரின் முகவரியையும் வாங்கி கொண்டு விடுவிக்கப்பட்டனர். பெங்களூரு தெற்கு எஸ்.பி., சீனிவாஸ் கவுடா கூறியதாவது: கைதானவர்கள் முகவரியை சேகரித்து வைத்துள்ளோம். அனைவரும் பெங்களூரு நகரின் பல பகுதி களை சேர்ந்தவர்கள். எல்லாருக்கும், 19 முதல் 23 வயது இருக்கும். 'ஜெனரல் ஜீ' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட, 'வாட்ஸாப்' குழுவில், 'ரேவ் பார்ட்டி' குறித்து பதிவிடப்பட்டது. இந்த பதிவை பார்த்து பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த நான்கு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. 'ஹோம் ஸ்டே' சட்டவிரோதமாக நடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.