| ADDED : ஆக 12, 2024 06:29 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொட்டிய கன மழை காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். இன்று(ஆகஸ்ட் 12) பள்ளிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், கரௌலி, சவாய் மாதோபூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மழை பாதித்த பகுதிகளில் மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.20 பேர் பலி
ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணை நீரில் மூழ்கி, 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. பாரத்பூரில் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள ஆற்றில் மூழ்கி, ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டதில் இரு இளைஞர்கள் இறந்தனர். மழை காரணமாக, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.பாதுகாப்பாக இருங்கள்!
பேரிடர் மேலாண்மை நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. '' மாநில மக்கள் அனைவரும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் துறையினர் வழங்கும் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்'' என முதல்வர் பஜன் லால் சர்மா அறிவுரை வழங்கி உள்ளார்.