உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோ ஓட்டி அசத்தும் பெண்

ஆட்டோ ஓட்டி அசத்தும் பெண்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகரில் கைதேர்ந்த வாகன ஓட்டிகளே வாகனங்களை ஓட்ட தடுமாறுகின்றனர். நிலைமை இப்படி இருக்கும் போது ஒரு பெண் சர்வ சாதாரணமாக ஆட்டோ ஓட்டி அசத்துகிறார். அவரை பற்றி பார்க்கலாம்.பெங்களூரின் கோரமங்களா ராஜேந்திரா நகரில் வசிப்பவர் புஷ்பலதா, 35. 'நம்ம யாத்ரி' திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுகிறார். ஆண் ஆட்டோ டிரைவர்களை போன்று காக்கி சட்டை அணிந்து கெத்தாக, நகரில் ஆட்டோவில் வலம் வருகிறார்.

2 மகள்கள்

ஆட்டோ ஓட்டும் பயணம் குறித்து புஷ்பலதா கூறியதாவது:எனது கணவர் டேவிட் ராஜ். கூலி வேலை செய்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் பி.யு.சி., முதலாம் ஆண்டும், மகன் 9ம் வகுப்பும், இன்னொரு மகள் 7 ம் வகுப்பும் படிக்கின்றனர். கணவர் இருக்கும்போதே ஒரு சங்கத்தின் உதவியுடன் கார் ஓட்ட கற்று கொண்டேன். அவர்கள் எனக்கு ஓட்டுனர் உரிமம் எடுத்து கொடுத்தனர்.பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களை, 'பிக் அப், டிராப்' செய்து வந்தேன். ஆனால் கொரோனா காரணமாக அந்த வேலை நின்று போனது. கணவர் இறந்த பின், பிள்ளைகளை படிக்க வைக்கவும், அவர்களை பராமரிக்கவும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டு வேலைகளுக்கு சென்றேன்.

ஒரே வாரத்தில்...

அப்போது தெரிந்த ஒருவர் மூலம் நம்ம யாத்ரி பற்றி தெரிந்தது. அங்கு சென்றேன். அவர்கள் எனக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளித்தனர். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் இருந்ததால், ஒரே வாரத்தில் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டேன். அவர்கள் எனக்கு ஓட்டுனர் உரிமம் எடுத்து கொடுத்தனர்.நான், நம்ம யாத்ரியில் சேர்ந்தபோது ஒரு நாளைக்கு கட்டணம் 262 ரூபாய். பணத்தை செலுத்தி ஆட்டோவை எடுத்து வரலாம். சார்ஜிங் ஆட்டோ என்பதால், நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால் 160 கி.மீ., துாரம் ஓட்டலாம்.தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 3:00 மணி முதல் இரவு 10:30 மணி வரையும் ஆட்டோ ஓட்டுகிறேன். தினமும் 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கிறது.ஆட்டோவில் பயணிக்கும் பயணியர் என்னை பாராட்டுவது, ஊக்கம் அளிக்கிறது. சரியாக ஆட்டோ ஓட்டுவதால் பயணியர் எனக்கு '5 ஸ்டார் ரேட்டிங்' கொடுப்பர். பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஆட்டோ ஓட்டுவது சற்று சிரமம் தான். ஆனாலும் வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி தான் ஆக வேண்டும்.சில நேரங்களில் சிலரின் கேலி, கிண்டலுக்கும் ஆளாகி உள்ளேன். 'உங்களைப் போன்ற பெண் ஆட்டோ டிரைவர்களால் தான், எங்களது வருமானம் பறிபோகிறது' என்று என்னிடம் சில ஆட்டோ டிரைவர்கள் கூறியுள்ளனர். அப்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும். 'நாங்களும் உங்களை போன்று பிழைப்பை நடத்த தான் ஆட்டோ ஓட்டுகிறோம்' என்று கூறியிருக்கிறேன்.ஆட்டோவை மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். ஏதாவது ஆட்டோவில் கீறல் விழுந்தால் நான் தான் அதை சரி செய்து கொடுக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும்போது என்னதான் நன்றாக செய்தாலும், வீட்டு உரிமையாளர் குறை சொல்வார். ஆனால் இந்த தொழிலில் அப்படி இல்லை. நானே ராஜா... நானே மந்திரி... எனக்கு எப்போது விடுமுறை தேவையோ அப்போது எடுத்து கொள்ளலாம். இன்னும் நிறைய பெண்கள் ஆட்டோ ஓட்ட முன்வர வேண்டும் என்பது எனது விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை