உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 32,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது: ஐகோர்ட் உத்தரவால் மேற்கு வங்க அரசு நிம்மதி

32,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனங்கள் ரத்து செல்லாது: ஐகோர்ட் உத்தரவால் மேற்கு வங்க அரசு நிம்மதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், 32,000 துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து, கொல்கட்டா உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தப்பினர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2014ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை தொடர்ந்து, துவக்க பள்ளி ஆசிரியர்களாக, 45,000 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நியமன நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அறிவுறுத்தல்

கடந்த, 2023ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய, 32,000 ஆசிரியர்கள் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அத்துடன், மூன்று மாதங்களுக்குள் புதிதாக ஆசிரியர் நியமன நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார். இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி அரசு தரப்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, நீதிபதி சோமன் சென் தலைமையிலான டிவிஷன் அமர்வு விசாரித்தது. ஒரு கட்டத்தில் தனிப்பட்ட காரணங்களால் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து இவ்வழக்கு, நீதிபதிகள் சுப்ரதா தலுக்தார் மற்றும் சுப்ரதிம் பட்டாச்சார்யா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வு, ஒரு நபர் நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு தடை விதித்தது, ஆறு மாதங்களுக்குள் ஆசிரியர்கள் நியமன நடவடிக்கைகளை புதிதாக துவங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இறுதி விசாரணை

அதன் பின், உச்ச நீதிமன்றத்தை மேற்கு வங்க அரசு அணுகிய நிலையில், கொல்கட்டா உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை மீண்டும் கொல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கே அனுப்பி வைத்தது. இந்த முறை நீதிபதிகள் தபாபிரதா சக்ரவர்த்தி மற்றும் ரீத்தோபிரோடோ குமார் மித்ரா அடங்கிய அமர்வு இறுதி விசாரணை நடத்தி, ஒரு நீதிபதி அமர்வின் உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. இதனால், வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த 32,000 துவக்க பள்ளி ஆசிரியர்கள் தப்பினர். கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

'மகிழ்ச்சி தரும் தீர்ப்பு'

கொல்கட்டா உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து முதல்வர் மம்தா கூறியதாவது: நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி தருகிறது. 32,000 ஆசிரியர்களின் பணி காப்பாற்றப்பட்டுள்ளது. நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவே விரும்புகிறோம்; பறிக்க அல்ல. வழக்கை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அணுகி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் மூலம், ஆசிரியர்களின் குடும்பத்தினர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவரது வேலையை பறிக்க, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுகுவது சரியான செயல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆசிரியர்களின் பணி நியமனங்களை நிறுத்தி வைத்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய, தன் பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் சேர்ந்தார். தற்போது அவர் மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி