உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனை: அதிகாரிகள் உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி வணிக வரித்துறையில் சி.பி.ஐ., விடிய விடிய சோதனை: அதிகாரிகள் உட்பட 4 பேர் கைது

புதுச்சேரி,:புதுச்சேரியில் வரி கணக்கை குறைத்து காட்ட லஞ்சம் வாங்கிய, வணிக வரித்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ.,யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுச்சேரி நுாறடி சாலை, இந்திரா சிக்னல் அருகே வணிக வரி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும், மாநில அரசின் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கம்பெனிகளில் உற்பத்தி செய்யும் பொருட்களின் அளவை குறைத்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ய உதவி செய்து வருவதாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது.அதைத் தொடர்ந்து, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள், புதுச்சேரியை சேர்ந்த வணிக வரி ஆலோசகர் ராதிகாவின் மொபைல் போன் உரையாடல்களை கடந்த ஒரு மாதமாக கண்காணித்து வந்தனர்.அதில், ஒரு தொழிலதிபர் தன் கம்பெனியில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு வரி குறைத்து காண்பிக்க ராதிகா உதவியை நாடியுள்ளார். அதற்கு, அவர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி, தொழிலதிபர் ஆன்லைன் வாயிலாக 2 லட்சம் ரூபாயை ராதிகாவிற்கு அனுப்பினார்.ராதிகா அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து, நேற்று முன்தினம் வணிக வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார். அதன்படி, அன்று மாலை 4:45 மணிக்கு புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் நுழைந்த ஒன்பது பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், அங்கிருந்த ராதிகாவை கையும் களவுமாக பிடித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்டார்கோவிலில் தனியார் தொழிற்சாலை நடத்தும் வில்லியனுார், கலைவாணர் நகர் சோலை செல்வராசு என்பவரின், வரி கணக்கை குறைத்து காட்ட 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.அதன்படி, ராதிகாவிடம் லஞ்ச பணம் வாங்கிய உதவி வணிக வரி அதிகாரிகளான ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர், ஆனந்த், காரைக்கால் விழிதியூரை சேர்ந்த முருகானந்தம், லஞ்சம் கொடுத்த தொழிற்சாலை உரிமையாளர் சோலை செல்வராசு, புரோக்கராக செயல்பட்ட வரி ஆலோசகர் ராதிகா ஆகியோரை நேற்று மாலை 4:30 மணிக்கு கைது செய்தனர். பின், நான்கு பேரையும், புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். வீட்டில் சோதனை: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி வணிகவரித்துறை அதிகாரி முருகானந்தத்தின் வீடு, காரைக்கால் மாவட்டம் விழிதியூரில் உள்ளது. அந்த வீட்டில் நேற்று காலை 10:00 மணிக்கு நான்கு பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர் சோதனை நடத்தினர். 5 மணி நேரம் நடந்த சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை