UPDATED : ஆக 19, 2025 08:51 PM | ADDED : ஆக 19, 2025 07:18 PM
புதுடில்லி: எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்.இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) வாங் யீ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர்.தற்போது, எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடியுடன் வாங் யீ பேசினார். மேலும் இரு நாடுகளுக்கு இடையான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னேற்றம்
இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு கசானில் அதிபர் ஜின்பிங் உடனான எனது சந்திப்பிலிருந்து, இந்தியா-சீனா உறவுகள் முன்னேற்றத்தை அடைந்துள்ளன. எஸ்சிஓ உச்சிமாநாட்டின் போது தியான்ஜினில் நடைபெறும் எங்கள் அடுத்த சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான, ஆக்கபூர்வமான உறவுகள், உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.