புதுடில்லி: குஜராத் கரையை கடந்த பிறகு அரபிக்கடலில் ஏற்பட்ட அசாதாரண சூறாவளி வானிலை ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அரிய நிகழ்வானது 1976ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக நடந்துள்ளது.குஜராத் அருகே அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானது. கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான், வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 'அஸ்னா' என்ற புயலாக வலுவடைந்தது. புயல் தற்போது புஜ்ஜில் இருந்து மேற்கு-வடமேற்கில் 190 கி.மீ., தொலைவிலும், குஜராத்தின் நலியாவிலிருந்து 100 கி.மீ., மேற்கு-வடமேற்கிலும், பாகிஸ்தானின் கராச்சிக்கு தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தியக் கடற்கரையிலிருந்து விலகி வடகிழக்கு அரபிக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.அசாதாரண நிகழ்வு
இந்நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்ட சூறாவளி 48 ஆண்டுகளாக நடக்காத ஒரு நிகழ்வு என்பதால், வானிலை ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: வறண்ட காற்று காரணமாக மேற்கு அரபிக் கடல் பொதுவாக சூறாவளி உருவாக இடமளிக்காது. கடல் மேற்பரப்பு வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் அரபிக்கடலில் சூறாவளி புயல்கள் உருவானது ஒரு அசாதாரண நிகழ்வு.நேரத்தில் குழப்பம்!
1891 மற்றும் 2023க்கு இடையில் இந்த பகுதியில் மூன்று புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன. 1976, 1964 மற்றும் 1944ல் நிகழ்ந்தன. இந்த சூறாவளிகள் அனைத்தும் கடலை அடையும் போது சூறாவளி புயலாக வலுவடைவதற்கு முன் நிலத்தில் இருந்து தோற்றம் பெற்றன. பொதுவாக, மழைக்காலத்தில் அரபிக்கடலின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகவே இருக்கும். இதனால் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் சூறாவளி உருவாக வாய்ப்பில்லை.5 சூறாவளிகள்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றின் வேகம் மணிக்கு 52 கிமீ முதல் 61 கிமீ வரை இருக்கும், அதே சமயம் ஒரு சூறாவளி மணிக்கு 63 கிமீ முதல் 87 கிமீ வரை காற்றின் வேகத்தைக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் இரண்டையும் உள்ளடக்கிய வட இந்தியப் பெருங்கடலில், ஆண்டுதோறும் ஐந்து வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகிறது. பெரும்பாலானவை மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படுகின்றன. ஆய்வாளர்கள் இந்த சூறாவளியின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணித்து, எதிர்கால வானிலை கணிப்புகள் மற்றும் தாக்கங்களை பகுப்பாய்வு செய்வர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.