டில்லி வியாபாரிகள் கடையடைப்பு மார்க்கெட்டுகள் வெறிச்சோடிக் கிடந்தன
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமி நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, தலைநகர் டில்லியில் நேற்று 'பந்த்' நடத்தினர். அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மாநகரின் பல பகுதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 22ம் தேதி ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணியரை சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டு தப்பினர். இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தும், உயிரிழந்தோர் குடும்த்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும், டில்லி வர்த்தக மற்ரும் தொழிற்துறை சபை நேற்று, 'பந்த்' அறிவித்து இருந்தனர்.கன்னாட் பிளேஸ், சதர் பஜார் மற்றும் சாந்தினி சவுக் உட்பட மாநகரம் முழுக்க அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மாநகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, 'டில்லியில் நேற்று 8 லட்சம் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், ஒரு நாளில் மட்டும் 1,500 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டது' என கூறியுள்ளது.கன்னாட் பிளேஸில் நடந்த மெழுகுவர்த்தி பேரணியில் ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.கூட்டமைப்புத் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: இது வெறும் போராட்டம் மட்டுமல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நிலைப்பாடு. இந்தப் போராட்டத்தால் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். பஹல்காமில் உயிரிழந்தோர் நினைவாக இந்தக் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் அனைத்து வணிக உறவுகளையும் துண்டிக்க வேண்டும். அதேபோல பாகிஸ்தான் நாட்டு பொருட்களை நம் நாட்டினர் புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.எப்போதும், பரபரப்பாக இருக்கும் சதர் பஜார் நேற்று வெறிச்சோடிக் கிடந்தது. அதேபோல், ஆசியாவின் மிகப்பெரிய காந்திநகர் ரெடிமேட் ஆடை மொத்த விற்பனை மார்க்கெட்டில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
திருப்பி அடிக்கணும்: காங்கிரஸ்
பஹல்காமில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் உதய் பானு சிப் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் வருண் பாண்டே ஆகியோர் தலைமையில், ஜந்தர் மந்தர் சதுக்கத்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரை நேற்று பேரணி நடத்தப்பட்டது.ஏராளமானோர் தேசியக் கொடியை ஏந்தியவாறு, 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கமிட்டனர்.அப்போது, உதய் பானு கூறியதாவது:நம் நாட்டு மக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை மத்திய அரசு தண்டிக்க வேண்டும். ராஜதந்திரத்திரம் செய்ய இது நேரம் அல்ல. நேரடியாகவே கடும் பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. நாட்டு மக்கள் ராணுவம் மற்றும் மத்திய அரசுடன் நிற்கிறது. பயங்கரவாதத்தை வேரறுக்க மத்திய அரசுடன் காங்கிரஸ் கட்சி இணைந்து நிற்க உறுதிபூண்டுள்ளது.பயங்கரவாதத் தாக்குதல் மனிதகுலத்துக்கு எதிரான போர். பயங்கரவாதத்தின் ஒவ்வொரு மறைவிடத்தையும் வேரறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் பலியான ஒவ்வொரு அப்பாவியின் குடும்பத்துக்கும் நீதி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.