ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கு தள்ளுபடி
பெங்களூரு: காங்கிரசின் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட சிவரெட்டி மீது தொடுத்திருந்த மான நஷ்டவழக்கை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கோலாரின், சீனிவாசபுரா சட்டசபை தொகுதியில், காங்கிரசின் ரமேஷ்குமார், ம.ஜ.த.,வின் வெங்கடசிவரெட்டி, அரசியல் ரீதியில் நேரடி போட்டியாளர்கள். ஒரு முறை ரமேஷ்குமார், மற்றொரு முறை வெங்கடசிவரெட்டி வெற்றி பெறுவர். 2023ல் ம.ஜ.த., சார்பில் வெங்கடசிவரெட்டி களமிறங்கி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார்.கடந்த 2019 டிசம்பர் 20ல் வெங்கடசிவரெட்டி ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர், 'காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ்குமார், 120 ஏக்கர் வனம் மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, 545.22 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தினார்.தன் மீது குற்றம்சாட்டி, கவுரவத்தை குலைத்ததாகக் கூறி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், வெங்கடசிவரெட்டி மீது, ரமேஷ்குமார் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 'யாராவது அரசு அல்லது வனப்பகுதியை ஆக்கிரமித்திருந்தால், அந்த நிலத்தை மீட்பது பொதுமக்களின் நலனுக்கு நல்லது. அதே போன்று யாராவது, அரசு பணத்தை தவறாக பயன்படுத்தினால், இதுவும் கூட பொதுநலனுக்கு உட்பட்டது.நியாயமான முறையில், விசாரணைக்கு கோருவதை மானநஷ்டம் என, அழைக்க முடியாது. இந்த வழக்கின் விஷயங்கள், சூழ்நிலைகள் பொது நலன் சம்பந்தப்பட்டது. அரசு நில ஆக்கிரமிப்பு குறித்து, விசாரணைக்கு வலியுறுத்துவது, மானநஷ்டம் ஆகாது' என கருத்துத் தெரிவித்து, ரமேஷ்குமாரின் மனுவை, நேற்று தள்ளுபடி செய்தது.வெங்கட சிவரெட்டி