| ADDED : பிப் 06, 2024 12:11 AM
புதுடில்லி: பார்லிமென்டில் கேள்வி நேரத்தின் போது, கவனக்குறைவால் ஒரு கேள்வி புறக்கணிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பார்லிமென்டின் ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரம் நடந்தது. அப்போது விமானப் போக்குவரத்து துறை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.அந்த கேள்வியை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கவனக்குறைவால் புறக்கணித்தார். அடுத்ததாக கேட்கப்பட்ட 19ம் கேள்விக்கு பதிலளிக்க சம்ந்தப்பட்ட அமைச்சருக்கு உத்தரவிட்டார். இதனால், அதிருப்தி அடைந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜெயா பச்சன், காங்கிரஸ் எம்.பி., தீபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.கவனக்குறைவால் கேள்வி தவிர்க்கப்பட்டதாக கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. கேள்வியை புறக்கணித்தது ஏன் என கேள்வி கேட்டு அவர்கள் கூச்சல் எழுப்பினர்.அப்போது, அங்கிருந்த ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் கூறுகையில், '' சபையின் துணைத் தலைவர் குறித்து உறுப்பினர்கள் பேசியது என் மனதை மிகவும் புண்படுத்தியது. ''தொழில்நுட்ப குறைபாடு காரணமாக அந்த குறிப்பிட்ட கேள்விக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போய் விட்டது,'' என்றார்.