உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் வாலிபர் மூளைச்சாவு உறுப்புகளால் 8 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் வாலிபர் மூளைச்சாவு உறுப்புகளால் 8 பேருக்கு மறுவாழ்வு

நாகரபாவி: பெங்களூரில் விபத்தில் சிக்கிய 28 வயது வாலிபரின் உடல் உறுப்புகள் தானத்தால், எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.பெங்களூரை சேர்ந்தவர் தர்ஷன் குமார், 28. இவர், மார்ச் 27ம் தேதி பணிக்கு சென்று கொண்டிருந்தார். நாகரபாவி அருகே செல்லும் போது, சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மூளை சாவு

உடனடியாக அருகில் உள்ள, 'போர்டிஸ்' தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்த போது, மூளையில் ரத்தம் உறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரின் உயிரை காப்பாற்ற பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.கடைசியாக மூளை சாவு சான்றிதழ் கமிட்டியினர் ஆய்வு செய்து, தர்ஷன் குமார் மூளை சாவு அடைந்து விட்டார் என்று அறிவித்தனர். இது பற்றி அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உடல் உறுப்புகள் தானம் குறித்து விவரித்தனர்.பெற்றோரும், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டனர். ஐந்து மணி நேர தொடர் முயற்சியால், தர்ஷன் குமாரின் உறுப்புகள் அகற்றப்பட்டன.அவரின் இரு கண்கள் நாராயணா நேத்ராலயாவுக்கும்; இரண்டு நுரையீரல்கள், இதய வால்வுகள் மணிப்பால் மருத்துவமனைக்கும்; கல்லீரல் எச்.சி.ஜி., மருத்துவமனைக்கும்; ஒரு சிறுநீரகம் ராமையா மருத்துவமனைக்கும்; மற்றொரு சிறுநீரகம் போர்டிஸ் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இது, போர்டிஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த 41 வயது பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

29 நிமிடங்கள்

மருத்துவமனை டாக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:இரண்டு நுரையீல்கள், இதய வால்வுகள், போர்டிஸ் மருத்துவமனையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு, 'கிரீன் காரிடார்' மூலம் 29 நிமிடங்களில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது.ஆண்டுதோறும் 5 லட்சம் இந்தியர்கள், உடல் உறுப்புகள் பழுதால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 2 - 3 சதவீதம் பேர் மட்டுமே உடல் உறுப்புகள் தானத்தால் உயிர் பிழைக்கின்றனர்.டில்லியில் மட்டும் 2022ல் 11 உடல் உறுப்பு தானம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் 30 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அதேவேளையில், உடல் உறுப்புகள் கிடைக்காமல் ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால், தவறான தகவல்களாலும் தானம் செய்ய தயங்குகின்றனர். சரியான நேரத்தில் உறுப்புகள் தானம் செய்வதால், பல உயிர்களை காப்பாற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை