ஆவணங்களை மாற்றி எழுதிய தேவசம் போர்டு மாஜி தலைவர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைதான திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார், தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகளுக்கு பதிலாக செப்புத் தகடுகள் என ஆவணங்களில் மாற்றி எழுதியது, சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான மூலஸ்தானத்தின் இருபுறமும் உள்ள துவார பாலகர் சிலையில் இருந்த தங்க தகடுகளில் இருந்து, தங்கம் திருடு போனது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பத்தனம்திட்டா மாவட்ட மார்க்சிஸ்ட் முக்கிய நிர்வாகியுமான பத்மகுமாரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கை: கடந்த, 201 9 மார்ச் 19ல் பத்மகுமார் தலைமையில் நடந்த வாரிய கூட்டத்திற்கு பின், தங்க முலாம் பூசப்பட்ட கருவறை கதவுகளின் சட்டங்களை அகற்ற பத்ம குமார் உதவினார். அவற்றை தங்க முலாம் பூசவும் ஒப்படைத்துள்ளார். இந்த கதவுகளில், தங்க முலாம் பூசப்பட்டதை அறிந்தும், பதிவேடுகளில் செப்பு தகடுகள் என மாற்றி எழுதினார். இதன் மூலம், தங்க தகடுகளை, உன்னிகிருஷ்ணன் பெற வழிவகுக்கப்பட்டது. அதன்பின் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு, அக்கதவுகளில் இருந்து தங்கத்தை அகற்றி திருப்பி அனுப்பப்பட்டது. இவற்றை, மீண்டும் சரிபார்க்க பத்மகுமார் தவறியுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.