ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81.ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், 81. இவர் இந்தியாவின் பழங்குடியின அரசியல்வாதிகளில் முக்கியமானர். இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை நிறுவியவர். தற்போது முதல்வராக உள்ள ஹேமந்த் சோரனின் தந்தை. சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக, டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sq0p8lyn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 04) சிகிச்சை பலன் அளிக்காமல், சிபு சோரன் காலமானார். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தந்தை மறைவு குறித்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எனது குரு சிபு சோரன் நம் அனைவரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் ஒன்றும் இல்லாதவன் போல் ஆகிவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சிபு சோரனும், சர்ச்சைகளும்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவராக இருந்த சோரன், 1993ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார். அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அரசுக்கு ஆதரவாக சிபு சோரன் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் நான்கு பேரும் ஓட்டளித்தனர்.பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்ததாக பெரும் சர்ச்சை எழுந்தது. பின் நாட்களில் இது பற்றி சிபிஐ வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியது. பல்லாண்டுகள் நடந்த இந்த வழக்கில், பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கான சட்டப் பாதுகாப்பை காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட் அவரை விடுவித்து விட்டது.இதே போல தன்னுடைய தனிச்செயலாளரை கொலை செய்து விட்டதாக ஒரு வழக்கும் சிபு சோரன் மீது இருந்தது. அந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. ஆனால் வழக்கு நிரூபணம் ஆகவில்லை என்று கூறி உயர்நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்தது. இவ்வாறு ரத்து செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.இது மட்டுமின்றி பல்வேறு ஊழல் வழக்குகள், பிற மாநிலத்தவரை வெளியேற்றும் போராட்டங்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் சிபு சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல்
சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அடிதட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்த உன்னத தலைவர் சிபு சோரன் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் பழங்கு மக்கள், ஏழை, எளிய மக்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என அயராது உழைத்தவர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சிபு சோரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சுதந்திர இந்தியாவின் பழங்குடியினத்தவரின் நம்பிக்கையை பெற்ற மிகப்பெரிய தலைவர் சிபு சோரன். சுரண்டலுக்கு எதிரான சிபு சோரனின் போராட்டம், சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு நினைவு கூரப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஒத்திவைப்பு
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.