ரவுடியை சுட்டு கொன்று உடலை தமிழகத்தில் எரித்த நண்பர் கைது
பாகலுார்: நகை விற்பனை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ரவுடியை சுட்டுக் கொன்று உடலை தமிழகம் கொண்டு சென்று எரித்த நண்பர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, பாகலுாரை சேர்ந்தவர் குணசேகரன், 30; ரவுடி. கடந்த மாதம் 10ம் தேதி நண்பர் பிரிஜேஷ், 30, என்பவரை பார்த்துவிட்டு வருவதாக, மனைவி ஜோஸ்பினிடம் கூறிவிட்டு குணசேகரன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.கணவர் மாயமானதாக போலீசில் ஜோஸ்பின் புகார் செய்தார். பாகலுார் போலீசார் நடத்திய விசாரணையில், குணசேகரனை, பிரிஜேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலை தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள வனப்பகுதியில் எரித்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த பிரிஜேஷை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் நேற்று முன்தினம் பிரிஜேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.பிரிஜேஷ் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரும், குணசேகரனும் சேர்ந்து பஞ்சாப்பில் இருந்து போலி தங்க நகைகளை வாங்கி வந்து, பெங்களூரில் விற்பனை செய்து வந்தனர். குணசேகரன் தன் உறவினர் பணியாற்றும் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து பணம் வாங்கினார்.இதுபற்றி அறிந்த நிதி நிறுவன ஊழியர்கள், பணத்தை திரும்ப தராவிட்டால் போலீசில் புகார் செய்வோம் என குணசேகரனை எச்சரித்தனர். பயந்து போன அவர், பணம் தரும்படி பிரிஜேஷிடம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து, பிரிஜேஷ் போலி நகைகளை விற்கும் தொழில் செய்வதாக குணசேகரன் மற்றவர்களிடம் கூற ஆரம்பித்தார். இதனால் கடுப்பான பிரிஜேஷ், குணசேகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.கடந்த 10ம் தேதி பாகலுாரில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு குணசேகரனை வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின், உடலை காரில் எடுத்துச் சென்று தமிழகத்தில் எரித்தது தெரியவந்தது.