மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி கொன்றவர் கைது
புதுடில்லி:மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி சென்று, கொலை செய்த, 35 வயது நபர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.உத்தர பிரதேசத்தின் எடா என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜ்பால். இவர் ஏற்கனவே இரண்டு பெண்களை மணந்து, அவர்களுடன் வாழாமல் மூன்றாவதாக பெண் ஒருவரை மணந்துள்ளார். அந்த பெண்ணுடனும் அவருக்கு பிரச்னைகள் பல இருந்தன.இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பெற்றோருடன் துாங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அந்த நபர் துாக்கிச் சென்றார். இதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், அந்த நபரின் நடமாட்டத்தை, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணித்தனர்.நேற்று முன்தினம் போலீசார் ராஜ்பாலை சுற்றி வளைத்தனர். அவரிடம் விசாரித்த போது, துாக்கி சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணை கொன்று விட்டதாக கூறினார்.முன்னதாக, அவரை சுற்றி வளைத்த போலீசார் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். பதிலுக்கு அவர் காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவரை வீழ்த்தி, போலீசார் கைது செய்தனர்.அவரிடம் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை எதற்காக கடத்தி கொலை செய்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.